PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

மாநில அந்தஸ்து இல்லையெனில் கூட்டணி தொடராது – பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் நிபந்தனை

புதுச்சேரிக்கு மாநில அந்துஸ்து வழங்கினால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று என்.ஆர். காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட நிறைவடைந்திருக்கும் நிலையில், புதுவையில் இறுதி செய்யப்படாமல் இருக்கின்றன.

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்து வருகின்றது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்தே என்.ஆர். காங்கிரஸ் தே.ஜ. கூட்டணியில் இணைந்தது.

இந்த நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் பாஜக ஆட்சி செய்தபோதிலும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகின்றது.

இதுவரை புதுவை அரசு சாா்பில் 13 முறை தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம் மாநில அந்தஸ்து கோரி மீண்டும் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை பாஜகவுடன் தொடங்க வேண்டும் என்று என்.ஆர். காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை மாலை கூடிய என்.ஆர். காங்கிரஸ் உயர்நிலைக் குழு நள்ளிரவு 2.30 மணி வரை ஆலோசனை நடத்தியுள்ளது.

மாநில அந்தஸ்து, பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சரும் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா, இன்று மாலை புதுவைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *