தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், தனது அரசியல் வாழ்வில் அடுத்த முக்கிய பிரச்சாரத்தை வேலூரில் வருகின்ற பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சித் தொடக்கத்திற்குப் பிறகு, தமிழகம் முழுவதும் அரசியல் பயணங்களை மேற்கொண்டு வரும் விஜய், மக்கள் மத்தியில் நேரடியாகச் சந்தித்து தனது அரசியல் நோக்கங்கள் மற்றும் கட்சியின் இலக்குகளை விளக்கி வருகிறார். விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டினை விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தார். இதையடுத்து, கரூர் சம்பத்தில் விஜய் மீது சிபிஐ வழக்குகள் பாய்ந்தது.
அதன் பின்னர் ஈரோட்டில் கூட்டத்தை கூட்டிய விஜய் அடுத்ததாக வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜயின் வேலூர் கூட்டம் முக்கியமானதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.
வேலூரில் விஜய் மாநாடு
வட தமிழக அரசியலில் வேலூர் மாவட்டம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, இங்கு நடைபெறும் விஜயின் பிரச்சாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் மத்தியில் இந்த பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Leave a Reply